""தீவிரவாதம், மதவாதம் என்பவர்களுக்கு மத்தியில் யார் மக்கள் ஊழியன் என்பதை சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் தொகுதி காங்., வேட்பாளர் ஹசன்அலி பிரசாரத்தில் கேட்டுகொண்டார் . உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி மக்களின் நலன் கருதி பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவரது திட்டங்கள் தொடர மீண்டும் கருணாநிதி முதல்வராக வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் நான் புதியவன் அல்ல. மீனவர்களின் நலன் காப்பதில் நான் மிகுந்த அக்கரை கொண்டவன் என்பது மீனவர்களுக்கு தெரியும். மீனவர்களுக்கு உண்மையானவர்கள் யார் என்பது நன்கு தெரியும். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் , தீவிரவாதம், மதவாதம் என இரண்டு பேர் உங்களை சந்தித்து திரித்து கூறுவார்கள் .அவர்களால் இங்கு எதையும் சாதிக்க முடியாது. இஸ்லாமியர், இந்துக்கள் என பாரபட்சமில்லாமல் அனைவரிடமும் நாங்கள் பழகுகிறோம். ஆனால் பா.ஜ., வேட்பாளரோ மதரீதியாகவும், ம.ம.க.,வேட்பாளரோ தீவிரவாத ரீதியாகவும் செயல்படுகின்றனர். உங்கள் ஓட்டை பிரித்தால் அது நல்லதுக்கு போய்சேராது . எனவே நல்லவர்கள் யார் என சிந்தித்து செயல்பட வேண்டும். சாலை வசதிகள் விடுபட்ட பகுதிகளை அறிந்து அங்கு சாலை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி தருவேன். பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் பெற்றுத்தருவேன். காவிரி குடிநீர் விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி கிடைக்க வழிசெய்வேன். வதந்திகளை கண்டு ஏமாறாமல் நீங்களே நல்ல முடிவை எடுங்கள், என்றார். காங்., மாவட்ட தலைவர் ரவிசந்திர ராமவன்னி, மாவட்ட பொருளாளர் உச்சிப்புளி நாகேஸ்வரன், மண்டபம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனகு, தி.மு.க., நகர் செயலாளர் ஜான்பாய், ராமேஸ்வரம் நகர் தலைவர் பாரி, துணைத்தலைவர் ராஜாமணி, பாம்பன் ஊராட்சி தலைவர் ஹனிபா, மாவட்ட துணை செயலாளர் அகமது தம்பி, வக்கீல்கள் முனியசாமி, சோமசுந்தரம், காங்.,நகர் தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட சேவா தள தலைவர் தினேஷ்பாபு, வட்டார தலைவர் காருகுடி சேகர், முனியசாமி உட்பட பலர் உடன் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக