awisosplschool

awisosplschool

புதன், 6 ஏப்ரல், 2011

ரூ. 40,000 சொத்துக்களைக் கொண்ட சாய்பாபா டிரஸ்ட்டை கையகப்படுத்த ஆந்திர அரசு முடிவு?

ஹைதராபாத்: 180 நாடுகளில் ரூ. 40,000 கோடி அளவிலான சொத்துக்களைக் கொண்டுள்ள சாய்பாபாவுக்குச் சொந்தமான சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது குறித்து ஆந்திர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.


சாய்பாபா குடும்பத்தினருக்கும், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு ஆந்திர அரசு வந்துள்ளது.

அறக்கட்டளையின் பணிகள் தடங்கல் இல்லாமல் தொடர்ந்து நடக்க வசதியாக தற்போது அறக்கட்டளையை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சாய்பாபாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக அவர் மருத்துவமனையிலேயே இருக்கிறார். அவரது பேசும் திறனும் நின்று விட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர். யாராவது பேசினால் அதைப் புரிந்து கொண்டு தலையை மட்டுமே அசைக்க அவரால் முடிவதாக கூறப்படுகிறது.

சாய்பாபாவின் உடல் நிலை குறித்த முழுமையான, தெளிவான விவரத்தை இதுவரை பாபா அறக்கட்டளை வெளியிடாமல் உள்ளது. இதனால் அவரது பக்தர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் ஆந்திர அரசின் இந்த திடீர் திட்டம் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவை புட்டபர்த்திக்கு ஆந்திர அரசு அனுப்பியுள்ளது.

இந்த குழுவில் முதன்மை நிதிச் செயலாளர் எல்.வி.சுப்ரமணியம், முதன்மை சுகாதார செயலாளர் பி.வி.ரமேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ரகு ராஜு, உஸ்மானியா மருத்துவமனை இதயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமண் ராவ், உஸ்மானியா மருத்துவமனை டாக்டர் பானு பிரசாத் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் புட்டபர்த்திக்கு நேற்று இரவே வந்து சேர்ந்து விட்டனர். தங்களது ஆய்வை முடுக்கி விட்டுள்ளனர்.

அறக்கட்டளை உறுப்பினர்களுடன் பேசி அறக்கட்டளை நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள், சமூக சேவைப் பணிகள், நிதி விவகாரங்கள் உள்ளிட்டவற்றை இக்குழு ஆராயும்.

சாய்பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ. 40,000 கோடி என்று ஏற்கனவே வருமான வரித்துறைக்கு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அறக்கட்டளைக்கு வரும் நன்கொடைகள் உள்ளிட்டவற்று வரி விலக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து பாபா அறக்கட்டளைக்கு நூற்றுக்கணக்கான கோடி அளவுக்கு நன்கொடைகள், தானங்கள் வந்து குவிவது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பெரிய நிதிப் புழக்கம் இருப்பதால் இவை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இவற்றை அரசு ஏற்று நடத்தலாமா என்பது குறித்தும் இவர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

புட்டபர்த்தி மற்றும் பெங்களூரில் இரண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், பல்கலைக்கழகம், உலக மத அருங்காட்சியகம், பிளானட்டேரியம், ரயில்வே நிலையம், கிரிக்கெட் ஸ்டேடியம், இசைக் கல்லூரி, விமான நிலையம், உள்ளரங்க விளையாட்டரங்கம், விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பலவேற்றை அறக்கட்டளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

180 உலக நாடுகளில் 1200 சத்ய சாய்பாபா மையங்களும் அறக்கட்டளை நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இங்கு பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக