awisosplschool

awisosplschool

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

தினமும் 7,000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன

புதுடில்லி:"உலகம் முழுவதும், தினந்தோறும் ஏழாயிரம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன' என, சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, லண்டனில் இருந்து வெளிவரும் "லான்சட்' மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:உலகத்தில், சிசுக்கொலை என்பதைவிட, இறந்தே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பல்வேறு தடுப்பு முயற்சிகளுக்கு இடையிலும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. கடந்த 1995ம் ஆண்டு காலகட்டத்தில், 30 லட்சம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்திய 2009ம் ஆண்டு ஆய்வில், ஒரு ஆண்டுக்கு 26 லட்சம் குழந்தைகள் இறந்தே பிறப்பதாக, தெரியவந்துள்ளது.இதில், 68 சதவீதம் இந்தியா, சீனா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு, 1.1 சதவீதம் என்ற அளவில்தான் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது, உலகம் முழுவதும் ஒருநாளில், ஏழாயிரம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன.சொல்லப் போனால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில், 98 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
அதேசமயம், அதீத வருவாய் உள்ளவர்கள் வசிக்கும் நாடுகளில், இது மிகவும் குறைவாக உள்ளது. உண்மையில், மகப்பேறில் சிக்கல்கள் மற்றும் சிசுக்கொலை போன்றவற்றில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, இது மிக அதிகம்.மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், அதீத ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பால் கரு வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுதல், கரு வளர்ச்சி தடைபடுதல் மற்றும் பாரம்பரிய பாதிப்பு ஆகிய ஆறு பிரச்னைகள்தான், ஒரு குழந்தை இறந்தே பிறக்க காரணம்.பிறக்கும் தருணத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இதற்கு காரணம், மருத்துவமனையில், முறையான பராமரிப்பு இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைவு, போதிய மற்றும் தேர்ந்த அனுபவம் உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள் பணியில் இல்லாதது போன்றவை. மேற்கூறிய காரணங்களால், தாய், சேய் இருவரும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகையில், மூன்றில், இருபங்கு உயிரிழப்புகள் கிராமப் பகுதிகளிலேயே ஏற்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக